ஞாயிறு, 18 டிசம்பர், 2016

எனது கவிதை

என் காதல் கவிதைகளை படித்துவிட்டு,
'உன் கவிதைகளின் பாட்டுடைத்தலைவி'
யாரென்றாய் நீ, நீயென்றேன் நான்;

கேட்டதும் என்னை கோவத்தில் முறைத்தாய்,
'என்மீது முறைப்பென்ன, நீ என் முறைப்பெண்ணே',
சொன்னதும் வெட்கத்தால் முகத்தை மறைத்தாய்.!

எனது கவிதை

சிறகடித்து பறக்கவும் ஆசை,
மரமாகி கனிதரவும் ஆசை,
உண்மையில் இன்று சிறகில்லா சருகாய் நான்.!



நம்புகிறேன் முழுமூச்சோடு நானுமின்று,
இச்சறுக்கிலிருந்து துளிர்த்து தளிர்த்து மரமாகி
சிறகடித்து பறக்கும் நாளும் வருமென்று.!

வியாழன், 1 டிசம்பர், 2016

எனது கவிதை

அவமானமே அனுபவமாய்,
அழுகையே ஆறுதலாய்,
தோல்வியே தோழனாய்,
நிந்தையே நிரந்தரமாய்,
துக்கமே தூக்கமாய்,
கவலையே கனவாய்,
வேதனையே வழித்துணையாய்,
போராட்டமே பெரும்ஓட்டமாய்,
அமைவது ஏனோ?!



கனவொன்று காணப்படாமலேயே
            கலைந்து போகிறது,
வாய்ப்பொன்று வழங்கப்படாமலேயே
            தொலைந்து போகிறது,
அதிர்ஷ்டம்கூட என்னைவிட்டு
            அலைந்து போகிறது,
என் முயற்சிகள்கூட ஒவ்வொன்றாய்
            குலைந்து போகிறது.!

குறிப்பு:-
               தோல்விகளிலிருந்து பிறந்ததாயினும், தோல்வியிலும்கூட ஏதாவதொரு ஆக்கபூர்வமான முடிவு கிடைக்குமென எனக்கே உணர்த்திய என் தோல்விகளின் முடிவிலிருந்து பிறந்த என் தன்னம்பிக்கைக் கவிதை இது.!

ஞாயிறு, 20 நவம்பர், 2016

எனது கவிதை

ஏய் வெற்றியே,
ஒவ்வொருமுறையும் நீ என்னை
வெறுத்து ஒதுங்கிச் செல்லும்
இடைவெளியின் நீளமானது மெல்ல
மெல்ல குறைந்துகொண்டு வருவதை
நான் மட்டுமே அறிவேன்.!

My English Kavithai

I Treat You As A Kid,
We Are Not Just Kith, But
You Are Using Me As A Kit.!

I'm Being A Good Boy To You, But
You're Saying Good Bye To Me.!

மெனக்கெடல்

மெனக்கெடல்:

"எனக்காக நீ படும் மெனக்கெடல்கூட,
உன்னை இன்னும் பிடிக்கவைக்கிறது.!"
என்று நீ எழுதித்தந்த இக்கவிதையை,
மெனக்கெட்டு இன்னும் பத்திரமாக
காத்துவருகிறேன் உன் நினைவாக,
நீ என்னைவிட்டு போனபின்பும்கூட.!

வியாழன், 27 அக்டோபர், 2016

மண்

தேவனே மனிதனை நீர் படைத்தீர் 'Soil'-ஆல்,
அதிலும் படைத்தீர் உம்முடைய சாயலால்.! 


செவ்வாய், 11 அக்டோபர், 2016

எனது கவிதை

'பயனிலை'யாயிருப்பதால் பயனில்லையானாலும்,
என்றாவதொருநாள் கண்டிப்பாக
நீ எழுவாயாக 'எழுவாயாக'.!



புதன், 7 செப்டம்பர், 2016

சொல்லாக்காதல்

சொல்லப்படாத காதல்:

நீ சொல்லுவாயென நானும்
நான் சொல்லுவேனென நீயும்
நினைத்துக்கொண்டோமோ என்னவவோ,
இன்னும் சொல்லப்படாமல் இருக்கிறது
நம் காதல்.!

இணையதளம்

 இணைய-தளம்:

இருவேறு உள்ளங்கள் இணைய,
ஒரு தளமாக இருப்பதால்தானாே என்னவாே
'Internet'க்கு தமிழில் 'இணையதளம்' என்று பெயரோ?

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

எனது கவிதை

நான் தாடியுடன் இப்படியே திரிவதும்
ஷேவ் பண்ணி அழகாக தெரிவதும்,
உன்னுடைய முடிவில் தான் உள்ளது
என்று சொல்ல காதலி கிடையாது,
ஆயினும் சொல்கிறேன் சலூன் கடைக்காரரிடம்.!

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

எனது மொக்கைகள்

மொக்கை1: "பெயர்க்காரணம்"

       என் குழந்தை பருவத்தில், என் பெற்றோர் எனக்கு பெயர் வைக்கலாமா Say Yes (Or) No என்று என்னிடம் கேட்டனர், அதற்கு நான் No என்றேன். என்னது 'No'வா? என்றனர் உடனே என் தந்தை Nova (நோவா) இந்த பெயரே நன்றாக இருக்கிறதே என்று எனக்கு நோவா என்று பெயர் வைத்துவிட்டார்.
       நல்லவேளை நான் No என்றதால் நோவாவானேன், ஒருவேளை Yes என்று சொல்லியிருந்தால்  'Yes'ஆ 'எஸ்ஸா' என்று ஆகியிருப்பேன். நல்லவேளை அந்த பெயர் எனக்கு வைக்கப்படவில்லை. இதுதான் எனது பெயருக்கான பெயர்க்காரணம்.!


மொக்கை2:  "தூக்கமற்ற ஓர்  இரவு "

       ஒருநாள் எனக்கு இரவுமுழுதும் தூக்கம் வரவில்லையென்று என் தாயிடம் கூறினேன். இனி உரையாடலில்,
நான்: அம்மா எனக்கு நேத்து நைட் தூக்கமே வருல.
அம்மா: நைட் பூராவும் தூங்காம அப்படி எதைப்பத்தி யோசிச்சுகிட்டு இருந்த?
நான்: ஏன் எனக்கு தூக்கம் வருலனு யோசிச்சுகிட்டு இருந்தேன்.
அம்மா: (சற்று கடுப்புடன்) அப்போ எப்போதான் தூங்குன?
நான்: தூக்கம் வரப்போ தூங்குனேன்.
அம்மா: (சற்று அதிக கடுப்புடன்) அப்போ எப்பவரைக்கும் முழிச்சுகிட்டு இருந்த?
நான்: தூக்கம் வரவரைக்கும் முழிச்சுட்டு இருந்தேன்.
அம்மா: (கோபத்தின் உச்சியில்) இப்டியே பேசிட்டு இரு அப்புறம் என் கைதான் பேசும்.
நான்: ஓ, இதுதான் 'அம்மாவின் கைபேசி'யாமா ?
(இதற்கப்புறமும் நடந்ததைவேறு சொல்லவுவேணுமா?)


மொக்கை3:

       விடுமுறையில் என் அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தேன், ஒருநாள் என் தந்தையிடம் நான் போனில் பேசிக்கொண்டிருந்தபொழுது, உன்  அத்தை சமையல் எப்படி, நன்றாக சமைக்கிறார்களா? என்று கேட்டார். நான், என் அத்தை எனக்கு பின்னாடி இருப்பது தெரியாமல் 'எங்கத்த நல்லா சமைக்கிறாங்க?' என்று சலித்துக்கொண்டே உண்மையை உளறிவிட்டேன்.
       பிறகு திரும்பிப் பார்த்தேன் என்  அத்தை  என்னை முறைக்க தொடங்க, உடனே நான், 'எங்க அத்தை நல்லா சமைக்கிறாங்க' என்றுதான் சொன்னேன் என்றுகூறி அத்தையை நம்பவைத்துச் சமாளித்துவிட்டேன். இதில் தான் சொல்லமுடியாததை நான் சொன்னதால் மாமாவிற்கும் ஒரே சந்தோசம், இல்லையென்றால் பொண்ணு தரமாட்டாங்களே அதான்.!

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

ஒத்திகை

ஒத்திகை:

முன்பெல்லாம் உன்னிடம் தோற்கக்கூடாதென்று
பலமுறை எனக்குள் ஒத்திகை பார்த்திருந்தும்,
உன்னிடம் தோற்றுப்போனேன் நான்.!

இப்பொழுதெல்லாம் உன்னிடம் தோற்பதற்காகவே
எனக்குள் பலமுறை ஒத்திகை பார்த்துவந்து,
உன்னிடம் தோற்றுப்போகிறேன் நான்.!

சனி, 13 ஆகஸ்ட், 2016

எனது கவிதை அனுபவம்

இதெல்லாம் ஒரு கவிதையா?

நானெழுதியது கவிதையென நினைத்து
காட்டினேன் என் நண்பர்களிடம்; ஒருவன்,
'ஏதோ கவிதை எழுதியிருக்கிறாய் என்றாயே அதுயெங்கே?' என்றும்
மற்றொருவன், 'இதுதான் கவிதையா இதுவும் கவிதையா?' என்றும் கேட்டனர்.
ஆனால் அவர்கள் கூறியது எனக்கென்னவோ,
'இதெல்லாம் ஒரு கவிதையா?' என்றே கேட்டது.!

நீயேதான்

நீயேதான்:

எனக்குள்ளும் காதல் உள்ளதென்று
எனக்கே உணர்த்தியவளும் நீதான்,

எனக்குள் கொட்டிக்கிடக்கும் கவிதைகளை
வெளிக்கொணர்ந்தவளும் நீதான்,


இரவின் வெப்பத்தையும் பகலின் குளுமையையும்
ரசிக்கச்செய்தவளும் நீதான்,

இதுதான் காதலா அல்லது இதுவும் காதலா
என்று புலம்பச்செய்தவளும் நீதான்,

கடைசிவரை அந்த 'நீதான்' என்பது யாரென்று
என்னிடம் சொல்லாமல் சென்றவளும் நீயேதான்.!

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

எனது கதை

அறுவடையும் ஆறுவடையும்:

       ஒரு கிராமத்தில் ''விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம்'' நடந்தது. அங்கு வந்த அதிகாரிகளிடம் விவசாயிகள் தங்களது குறைகளை கொட்டி தீர்த்தனர். ஒருவர் அறுவடைக்கு முன்னமே போதிய மழையில்லாமல் பயிர் கருகி விட்டதென்றும், மற்றொருவர் வாங்கிய கடனை திருப்பி கட்ட வழியில்லையென்றும், இன்னுமொருவர் பருவநிலை மாற்றத்தால் விளைச்சலுக்கு சந்தையில் போதிய வருமானமில்லை நஷ்டமே மிஞ்சியதென்றும் ஒவ்வொருவராக குறைகளை கூறிக்கொண்டிருந்தனர். மேலும் மனுக்களையும் கொடுத்துவிட்டு தங்களது குறைகள் தீர்க்கப்பட்டு விடுமென நம்பிவந்துவிட்டனர்.

       அடுத்தநாள் காலை நாளிதழில், ''நேற்று நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு முகாமில் விவசாயிகளின் குறைகள் தீர்க்கப்பட்டது விவசாயிகள் மகிழ்ச்சி" என்று அச்சாகியிருந்தது. ஆனால் உண்மையில் நேற்று தீர்ந்தது விவசாயிகளின் குறைகளல்ல, அதிகாரிகளுக்காக பக்கத்து கடையில் வாங்கிவைத்திருந்த ஆறு வடைகள் மட்டுமே. மேலும் அவர்களது மனுக்கள்கூட வடையினது எண்ணெய்யை பிழிய உதவியதே தவிர வேறொன்றுக்கும் உதவவில்லை. அடுத்ததாக அந்த அதிகாரிகள் உங்கள் ஊருக்கு வந்தாலும் வரலாம், எதற்கும் ஒரு ஆறு வடைகள் வாங்கி வைத்து விடுங்கள் அவர்கள் பாவம்.!

கவிதை

செய்வினை - செயப்பாட்டுவினை

       விவசாயி நெல் சாகுபடி செய்தார்,
       நெல் விவசாயியை சாகும்படி செய்தது.!

சனி, 30 ஜூலை, 2016

நட்புறவு

நடைபயிலுமுதற்கொண்டு
நரைமுடிகொட்டும்வரை
நமக்காகத்தேர்ந்தெடுக்கும்
நல்லவுறவுகளே
நண்பர்கள்.!

இறை

அன்புள்ள எம் இறைவா,
உம் வார்த்தைகள் ஒருநாளும் இறவா.!

முதலும் முடிவும்

நித்தமும் பாடுவேன் நான் அந்தாதி,
ஆதியந்தமானவரின் சித்தமிருந்தால்.!

மற்றவரல்ல மாற்றுபவர்

சொற்பமாய் இருந்த என்னை,
சிற்பமாய் மாற்றியவர் நீரே கர்த்தாவே.!

அற்பமாய் எண்ணப்பட்ட என்னை,
அற்புதமாய் மாற்றியவர் நீரே கர்த்தாவே.!

எனக்கே உரித்தான கவிதை

எனக்கு இதய அறுவை சிகிச்சை ஏன் செய்தார்களென்று
எனக்கப்போது தெரியவில்லை, இப்போதுதான் புரிகிறது
இதற்கான காரணம், என்னுடைய இதயத்தை நீ
கொள்ளையடிப்பாயென தெரிந்ததால்தானோயென்னவோ
இப்படி சதி செய்திருக்கிறார்கள்
(ஐயையோ Sorry Sorry Spelling Mistake)
இப்படி சரி செய்திருக்கிறார்கள்.!


எனது கவிதை

சூரியனை நேருக்குநேராய் எதிர்கொள்வதாலேயே,
ஒளி கிடைக்கிறது சூரியனிலிருந்து நிலவுக்கு;
சுத்தியின் அடிகளை தாங்குவதாலேயே,
உளியிலிருந்து சிற்பமாகிறது கல்; அதுபோல
பிரச்சனைகளை தைரியமாக மேற்கொள்வதாலேயே,
வெற்றியானது வசப்படும்  நமக்கு.!


ஞாயிறு, 24 ஜூலை, 2016

எனது கவிதை

உனக்கு நான் அற்பமானவன்,
எனக்கு நீ அற்புதமானவள்.!

வரம்

தெய்வம்போல தாயும்
தாய்போல சகோதரியும்
சகோதரிபோல தோழியும்
தோழிபோல காதலியும்
காதலிபோல மனைவியும்
தேவதைபோல மகளும்
கிடைப்பது வரமாகும்.!

பெண்ணியம்

பெண்ணியம் பேசிய ஆண்களும்கூட,
பண்ணிய புண்ணியம் ஒன்றுமில்லை;
குலமகள் என்றால் கொண்டா பணம்,
விலைமகள் என்றால் இந்தா பணம்;
பணத்தால் பிணமாகும் பெண்கள் எத்தனையோபேருண்டு,
சமுதாயத்தில் அவர்களுக்கும்தான் எத்தனையோபேருமுண்டு;
மலடி, விதவை, ஓடுகாலி, வாழாவெட்டி, விபசாரி
இன்னுமின்னும் எத்தனையெத்தனையோபேர்.
ஒலிம்பிக்கில் இந்தியாவின் மானத்தைக் காப்பாற்ற பெண்கள் உண்டு,
இந்தியாவில் பெண்களின் மானத்தைக் காப்பாற்ற யார் உண்டு?

முடிவு உன் கையில்

ஆரம்பத்தில் எனக்குச் சாதகமாகத் தோன்றி 
நானெழுதும் ஒவ்வொரு கவிதையும்கூட, ஏனோ
முடிவில் உனக்குச் சாதகமாகவே அமைந்துவிடுகின்றன .!

கை வந்த கலை

கை வந்த கலை: 

முதலில் மறுப்பதும்
பின்னர் மறைப்பதும்
முடிவில் மறப்பதும்
பெண்களுக்கும்

முதலில் வேண்டாமென தவிர்ப்பதும்
முடிவில் வேண்டுமென கிடந்து தவிப்பதும்
ஆண்களுக்கும்

கை வந்த கலை.!

வெள்ளி, 22 ஜூலை, 2016

நினைப்பு

நினைப்பு:

உன்னை மறக்காமல் நினைத்துக்கொண்டிருக்கும்போதெல்லாம்
சமயங்களில் என்னை மறந்துவிடுகிறேன்.!

உன்னை மறக்க நினைக்கும்போதெல்லாம் மறந்துபோய்
உன்னையும் சேர்த்தே நினைத்துவிடுகிறேன்.!

உன்னுடைய ஒவ்வொரு நினைவுகளையும்,
உன்னுடைய வேறொரு நினைவு களையும்.!

உன்னை மறக்க நினைத்தேன்
பின்னர் படிப்படியாக மறந்தேன், உன்னையல்ல
உன்னை மறக்க நினைத்த நினைப்பை.!

வெள்ளி, 15 ஜூலை, 2016

விக்கல்

விக்கல்:

எனக்கு விக்கல் வரும்போதெல்லாம்
நீதான் என்னை நினைக்கிறாயென,
நான் உன்னை நினைத்துக்கொள்வேன்.!

ஞாயிறு, 10 ஜூலை, 2016

அன்பிற்கில்லை வறுமை

வறுமை:

என் நண்பன் என்னிடம் கூறினான், என் வீட்டில் நான் சாப்பிட்டால்தான் என் தாய் சாப்பிடுவாள் என்று.
நான் எவ்வாறு அவனிடம் கூறுவது, என் வீட்டில் நான் சாப்பிடவேண்டும் என்பதற்காய் என் தாய் சாப்பிடாமலிருப்பதை.!

கவிதை

ஒளி நேர்க்கோட்டில் செல்லுமென்று
எனக்கு உணர்த்திய ஆய்வுக்கூடம்,
எங்கள் ஓட்டை கூரை வீடுதான்.!

எனது கவிதை

கவிதை:

யாரோ யாருக்காகவோ எழுதவேண்டிய கவிதை ஒன்று,
இன்று என்னிடம் மாட்டிக்கொண்டு சித்திரவதை பட்டுக்கொண்டிருக்கிறது.!

எனது கவிதை

உருவத்தில்தான் நீ குள்ளம்,
அன்பில் பெருக்கெடுத்த வெள்ளம்,
உனக்கிருப்பதோ தூய்மையான உள்ளம்,
சிறிதும் அதிலில்லை கள்ளம்,
உன்னை தள்ளிவிட்டு கொன்ற இடம் ஒரு பள்ளம்.!

நீரே

நீரின்றி அமையாது உலகு
ஆம் கர்த்தாவே,
நீரின்றி அமையாது உலகு.!

வார்த்தை

தேவனே,
உம்மைப்பற்றி கவிதை எழுத
வார்த்தை பிடிபடவில்லை எனக்கு
பிறகுதான் புரிந்தது,
நீரே வார்த்தை என்று.!

விந்தை

நாம்  வென்று வந்தது கோடிகோடி விந்தை,
அதிலிருந்து மனிதனாக நாம் வந்ததும் விந்தையிலும் விந்தை.!

ஞாயிறு, 3 ஜூலை, 2016

தூக்கம்

முன் குறிப்பு:
             தூக்கம் 'தொலைத்த' ஒரு நள்ளிரவில்,
             'தேடாமல்' கிடைத்த கவிதை.!

தூக்கம் :
     "தூக்கத்தைப்பற்றிய கவிதையைக்கூட,
      தூக்கத்தைத்தொலைத்து எழுதவேண்டியிருக்கிறது."
      அடடே '!' குறி.

பின்குறிப்பு:
            இந்த கவிதை முதன்முதலில் தோன்றி எழுதப்பட்ட நேரம் நள்ளிரவு 2.30 மணி.!
           

அவசரம்


மிகவும் பொறுமையாக எழுதிக்கொண்டிருக்கிறேன்
ஒரு கவிதையை, 'அவசரம்' எனும் தலைப்பில்.
அடடே '!' குறி.

செவ்வாய், 28 ஜூன், 2016

எனது கவிதை

எனக்கு அவள் முழுமதி பெண்,
தாராளமாய் தரலாம் முழு மதிப்பெண்;
ஒருநாள் சாலையில் எதிர் பார்த்தேன்,
எனக்கானவளாக அவளை எதிர்ப்பார்த்தேன்;
என் இதயமே ஆனது அவளது இருக்கை,
இவைகளை சொன்னதால் அடித்தது என்னை அவளது இரு கை.!

'ச'கரவரிசை கதை

சத்திவேல்,
சாந்தி,
சித்ரா,
சீனிவாசன்,
சுமதி,
சூர்யா
சென்று
சேர்ந்தனர்
சைக்கிளில்
சொர்ணபுரம்,
சோபனாவின் குழந்தை
சௌமியாவைக் கண்டு, பரிசுகளுடன்
'ச்'சும் தந்தனர்.!

'க'கரவரிசை கதை

கட்டம்போட்டு
காய்நகர்த்தி
கிட்டயிருந்து
கீழேத்தள்ளி
குழிபறிச்ச
கூட்டாளியின்
கெஞ்சலை
கேக்காமல்
கையைவெட்டி
கொண்டுபோனான்
கோர்ட்டுக்கு
கௌதமன்.!

'ந'கரவரிசை கதை

நள்ளிரவு
நாளிலே
நித்திரையில்
நீ
நுழைந்தாய்
நூலிழையில்
நெஞ்சுக்குள்ளே,
நேசத்தால்
நையப்புடைத்து
நொறுக்கினாய்
நோவாவை;
நௌ, ஆர் யூ ஹாப்பி?

எனது கவிதை

நீயெப்போதும் செல்லும் நகரப் பேருந்து,
நீ வராததால் ஆனதின்று நகராப் பேருந்து.
ஆதலால் எட்டவில்லை நிகர வருவாய்,
ஆயுசுக்கும் எனக்கு நிகரா நீயே வருவாய்.!

வெறுமை

வெறுமை:












வெறுமை பற்றிய கவிதைகூட
வெறுமையாக  இருக்கிறதே
அடடே '!' குறி.

தலைப்பு

தலைப்பு:

தலைப்பையெழுதியாயிற்று இன்னும் ஒருவரிகூட தோணவில்லை
தலைப்பிற்கேற்ற கவிதையாக, தலைப்பு 'வெறுமை'
பொருத்தமாகத்தான் இருக்கிறது

அடடே '!' குறி

நட்பூ

'ந'ட்பு ஒரு 'ம'தமானது,
'நா'ம் பார்த்து 'மா'தமானது,
'நி'னைவுகள் என்றும் 'மி'தமானாது,
'நீ'ங்காமல் நெஞ்சில் 'மீ'தமானது.!


அய்லான் குர்தி

சிரியா குழந்தை ஒன்று, இனியும்
சிரியா குழந்தை ஆனது அன்று,
அதை ஏன் என்று கேட்பாரில்லை இன்று.!

உலகையே அழ வைத்துவிட்டாய் 'அய்லான் குர்தி',
இனியும் சிந்தப்படவேண்டாம் அயலானின் குருதி,
பகிருகிறேன் இதை பொதுநலன் கருதி.!


புதன், 8 ஜூன், 2016

நட்பு

நான் நீயாவதும்
நீ நானாவதும்
நட்பு;
நான் நானாவதும்
நீ நீயாவதும்கூட
நட்புதான்.!


செல்லப்பெயர்

செல்லப்பெயர்:

'கூப்பிட மட்டும்தான்' பெயர் என்பதுபோய்,
'தான்மட்டும் கூப்பிட' என்பதாகும் பெயர்
செல்லப்பெயர்.!

வெறுயெவரும் வேறுயெவருக்கும் வைத்திராத பெயர்;
இருவர்மட்டுமே அறிந்த இருவருக்குமான பெயர், இந்த
செல்லப்பெயர்.!

குறிப்பு:
நமக்கு மிகவும் பிடித்தவருக்கு செல்லப்பெயர் வைப்பதென்பது ஒரு கவிதை எழுதுவதற்கு சமமென்றால் அந்த செல்லப்பெயர் பற்றிய இந்த கவிதை?

ஞாயிறு, 8 மே, 2016

கேட்டதில் பிடித்தது

 நான் கேட்டதில், எனக்கு மிகவும் பிடித்தது:

50 வயதை கடந்த ஒரு ஆதர்ஷ தம்பதியரின் உரையாடல்,
கணவர்: அதான் நம் பிள்ளைகளுக்கு எல்லாம் திருமணமாகி பேரப்பிள்ளைகளாம் பாத்தாச்சே, பின்ன இன்னும் ஏன் நம்ம பிள்ளைகள குழந்தைகள் மாதிரி நடத்துற, மனசளவுல இன்னும் அவுங்கள இடுப்புல தூக்கிவச்சு குழந்தையாட்டம் பாத்துகிட்டுறுக்குற, போதும் அவுங்கள இறக்கி விடு.!

மனைவி: ஏங்க, நான் இன்னும் என் குழந்தைகளுக்கும் எனக்குமான தொப்புள்கொடியே  கத்தரிக்கப்படவில்லைன்னு நினைச்சிட்டுருக்கேன் நீங்க என்னடானா............ போங்க.!

வியாழன், 14 ஏப்ரல், 2016

எனது படைப்பு

அன்றொருநாள் பேருந்தில் 'செல்கையிலே'
வைத்திருந்தேன் அழகான 'செல் கையிலே',
போகின்ற காரியம் 'அவன்கால்'
வந்தது எனக்கு 'அவன் கால்',
அவன் தானிய  கிடங்கில் 'போரடிக்கிறான்'
இப்போது போனிலும் 'போர்  அடிக்கிறான்',
அவனிருக்குமிடம் இருந்துச்சு ஒருகாலத்துல 'ஏரியா'
இப்போ ஆகிபோச்சு சென்டர் ஆப் த 'ஏரியா'.!

எனது கவிதை


ஏ மாற்றமே, என்னை மாற்ற முயற்சிக்காதே
கடைசியில் உனக்கு மிஞ்சபோவது ஏமாற்றமே.!

வியாழன், 7 ஏப்ரல், 2016

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

எனது கவிதை

எதையாவது ஒன்றை 'விடும்' முயற்சிக்குக்கூட,
மிக மிக முக்கியமானது 'விடா' முயற்சியாகும்.!


மறதி

மறதியைப் பற்றி கவிதை எழுத,
யோசித்து வைத்த நான்கு வரிகளும்
மறந்து விட்டதே
அடடே '!' குறி.

எனது கவிதை

தலை தொங்கி நிற்கும் நானும்,
தழைத்தோங்கும் நாளும் வரும்.!